இந்திய வரலாறு எனக்குள் ஏற்படுத்திய சலனங்கள்

வெகு சமீப காலம் வரையிலும் கூட இந்திய வரலாறு என்று நான் தெரிந்து வைத்திருந்தது சேர,சோழ,பாண்டிய,முகலாய, இன்ன பிற மன்னர்கள் – அப்புறம் ஆங்கிலேயர்கள் – காந்தியும், காங்கிரசும் சேர்ந்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் – இந்திய ஜனநாயக அரசியலமைப்பு என்ற அளவில் மட்டுமே.பிறகுதான் புரிந்தது. நான் மட்டுமின்றி என் வயதையொத்த பலரும் இருப்பது இப்படியேதான் என்று.

பள்ளிக்கூட சமூக அறிவியல் புத்தகங்கள் சொன்ன வருடங்களும், வரலாற்று நிகழ்ச்சிகளும் 2 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளாகவும், 5 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளாகவே எங்களுக்குள் வலம் வந்ததால், ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கூட, உணர்ச்சியின்றி மனப்பாடம் பண்ணி ஒப்பித்துக் காட்டி, 5 மார்க் நிச்சயம் என்ற அளவிலேயே பெருமைப் பட்டுக் கொண்டோம்(டேன்).

இப்படியாக வரலாற்றிற்கும், எங்களுக்குமிருந்த உணர்ச்சியற்ற பிணைப்பை, 11, 12 ஆம் வகுப்புகள் எளிதாய்ப் பிரித்தன. 1 ஆம் வகுப்பிலிருந்து, 10 ஆம் வகுப்புவரை, கொஞ்ச கொஞ்சமாய் நாங்கள் பெற்ற வரலாற்றறிவை, 2 வருடங்கள் கழித்து, 12 ஆம் வகுப்பின் இறுதியில் இருந்து கொண்டு நினைவு கூர்கையில், சாஜகான் கட்டிய தாஜ்மகாலும், அசோகர் நட்ட மரங்களும், ஔரங்கசீப், வீரசிவாஜி எனும் பெயர்களும் மட்டுமே நினைவிற்கு வந்தன.

முதலாம், இரண்டாம், மூன்றாம், விஜயாலய,பராந்தக சோழர்களும், நரசிம்ம, மகேந்திர பல்லவர்களும் ஏற்படுத்திய பெயர்க் குழப்பங்களால், இந்திய வரலாறும், தமிழக வரலாறும் எனக்கு கசப்பான மருந்தாகவே இருந்து வந்தது. பின்னாளில் படிக்க ஆரம்பித்த வரலாற்று நாவல்களே இந்த பெயர்க் குழப்பங்களை தீர்த்து வைத்த ஆபத்பாந்தவர்கள். ஆனாலும், வெறும் பொழுது போக்கிற்காகவும், ஹிரோயிச சண்டைக் காட்சிகளின், கவர்ச்சிக்காகவும் படிக்கப் பட்ட இந்த நாவல்கள் ஆரம்பத்தில் எனக்குள் பெரிய வரலாற்றறிவைப் புகுத்தி விட வில்லை.

காதலையும், வீரத்தையும் மட்டுமே வரலாறாக காட்டி வந்த காலகட்டத்தில், பிரபஞ்சன் எழுதிய “மானுடம் வெல்லும்” எனும் வரலாற்று நாவல் கைக்கு கிடைத்தது. காதலில்லாமல், போர்கள் இல்லாமல், ஐரோப்பியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் மிகுந்திருந்த அந்த கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு மனிதரின், டைரிக் குறிப்புகளைப் போல எழுதப் பட்ட இந்த புத்தகமே, வரலாற்றினை, பாடங்கள் கற்றுத் தரும், நிகழ்வுகளின் தொகுப்பாக என்னைப் பார்க்க வைத்தது.

காலம் கடந்து ஏற்பட்ட இந்த வரலாற்றின் மீதான ஈர்ப்புக்கு, வெகு நிச்சயமாக சரித்திர நாவல்களே, நாவல்கள் மட்டுமே காரணம் என்று சொல்லலாம். அதற்குப் பின்பு, பல்வேறு சமயங்களில், பற்பல விஷயங்களிற்காக, இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல்வேறு வகைப் பட்ட வயதினருடனும் (ஒரு சில போன தலைமுறை வயதினருடனும்), பேசிய பின்பு நான் புரிந்து கொண்டது இதுவே:

ஐரோப்பியர்களின் இந்திய ஆக்கிரமிப்பும், மறு விளைவாக இந்தியா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர போராட்ட வரலாறு குறித்தும், நான் உட்பட பலருக்கும் ஒரு தெளிவான முழு வரலாற்றுப் பிண்ணனி தெரிந்திருக்க வில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில, பல வரலாற்று விஷயங்களை அறிந்து வைத்திருந்தார்களேயொழிய, வருடங்களுடன் சேர்த்து வரலாற்று நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்திய கலாச்சார மற்றும் அரசியல் தாக்கங்களையும் முழுதாக தெரிந்திருக்க வில்லை.

சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த வலைப் பதிவர் சந்திப்பில் ஒரு விஷயம், திரும்பத் திரும்ப பலரால் வலியுறுத்தப் பட்டது. ஒரு வலைப் பதிவை இன்னொரு வலைப் பதிவர் படித்து விட்டு கருத்து சொல்வது எனும் நிலை மாறி, வலைப் பதிவுகளை வெகு ஜன வாசகர்களும் தீவிரமாகப் படிக்கும் நிலை வர வேண்டும் என்பதே அது. அதற்கு முக்கியமாக நாம் செய்ய வேண்டியது, பதிவுகளின் தரம் உயர வேண்டும்.கதை கவிதை,அரசியல் கட்டுரைகள், நகைச்சுவை அனுபவங்கள் மட்டுமின்றி, துறை சார்ந்த பதிவுகளும், தகவல் களஞ்சியப் பதிவுகளும் அதிகரிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.

இந்த இரண்டு விஷயங்கள் எனக்குள் ஏற்படுத்திய சலனங்களின் காரணமாக, ஒரு முயற்சியாக, 15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பியர் வருகையால், இந்திய அரசையலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மையமாக வைத்து, ஒரு வரலாற்றுக் கட்டுரைத்தொடரை எழுத இருக்கின்றேன்.

இன்றில்லாவிடினும்,எப்போதாவது ஒரு நாள் வலைப்பதிவுகளையும், தகவல் களஞ்சியமாகவும், துறை சார்ந்த விஷயங்களின் அறிவினைப் பெறவும் உபயோகிக்கும் நிலை வரும் போது, இது போன்ற கட்டுரைகள் கொஞ்சமாகவேனும் உபயோகமாய் இருக்கும் என்பதற்காக மட்டுமின்றி, ஒரு பெரிய சுய நலத்தை முன்னிட்டும் இதை எழுத இருக்கின்றேன்.

இத் தொடருக்கான ஆதாரங்களையும், விஷயங்களையும் தேடித் தேடித் தொகுத்தளிக்கும் வகையிலாவது, கொஞ்சம் விசாலமான வரலாற்றறிவைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சுயநல முனைப்புடனேயே தொடங்குகின்றேன்.

முதல் கட்டுரையில், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் என்று அனைவரும் ஒட்டு மொத்தமாக இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்ய முயன்றதற்குக் காரண்மாய் இருந்தது எது? அந்கழ்ச்சி நடந்தது எப்போது? முதன் முதலில் இந்த்யாவிற்குள் காலடி எடுத்து வைத்தது யார்? எங்கே? அப்போது இந்தியாவில் இருந்த சூழ்நிலை என்ன? என்பதற்கான விடைகளை தருகிறேன்.

பி.கு: நான் ஒன்றும் பெரிய வரலாற்று ஆய்வாளன் கிடையாது.பல்வேறு மூலங்களையும் தேடிப் படித்து, அதை எளிய வடிவில் ஒன்றாக தொகுத்துத் தர முனைகிறேன் அவ்வளவே. இது குறித்தான உங்களது பரிந்துரைகளையும், suggested sources ஐயும் ஏற்கத் தயாரகவே உள்ளேன்.ஓவரா பில்டப் கொடுக்கிறேனோ? வெத்து சீன் விடறேனொ? சரி மன்னிச்சு விட்டுடுங்க. பொழைச்சு போறேன்.

கட்டுரை, வரலாறு இல் பதிவிடப்பட்டது . 16 மறுமொழிகள் »