பத்தினிப் பெண்கள்

முதலிரவில்,
என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே
நொறுங்கிப்போனது
உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.


ஒவ்வொரு நாள் காலையிலும்,
தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில்,
பொய்த்துக் கொண்டிருக்கிறது
மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும்.

புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும்,
உன் முகம் அடையும் பிரகாசத்தை
நம் வீட்டு படுக்கையறையில் கூட
இதுவரை கண்டதில்லை.

உப்புப் போட மறந்ததையும்,
சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும்,
தாண்டி
என்னிடம் பேச
விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை.

‘அவரு’, ‘என் வீட்டுக்காரர்’
உன் உதடுகள்
உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு
என் பெயர்
கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு.


“ம்ம்ம்…….. வந்து
அடுத்த வாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா”
தயங்கி தயங்கி
கேட்கும் ஒவ்வொரு முறையும்
உன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறேன்.

“வாங்க… உட்காருங்க… காஃபி சாப்பிடுங்க…”
இயந்திரத் தனமாய்
இம்மூன்றைத் தவிர வேறெதையும்
என் நண்பர்களிடத்தில் பேசியதாய்,
எனக்கு நினைவில்லை.

தோழியென்றோ, தோழனென்றோ,
ஒருவருமே இல்லாமல்
உன்னுடைய ஒட்டு மொத்த உலகமே
கணவனும், புகுந்த வீடும் மட்டுமே
என்பதில் நீ வேண்டுமானால்,
பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

என் தந்தையின் எதிரே
அமர்ந்து பேச மறுக்கும்
ஒவ்வொறு முறையும் நினைவுறுத்துகிறாய்
உன் தந்தையின் முன்பு மட்டும்
நீ கால் மீது கால் போட்டமர்ந்து
பேசுவதை.

வழி வழியாய் வந்ததையே
பார்த்தோ…
கேட்டோ…
பழகியோ…
நீயும்
‘வத்தக் குழம்புக்குள்’
உன் உலகை
தேடிக் கொண்டிருக்கிறாய்.

போர்த்திக் கொண்டு,
தூணின் பின் நின்று,
நிலம் பார்த்து
பதில் சொல்லும் பழக்கம்
நம் பாட்டிகளோடு
போகட்டும்.

வந்து விடு.
கற்புக்கரசிகளும், பத்தினிப் பெண்களும்
காவியங்களோடு போகட்டும்.
சரி, தவறுகள் செய்யும்
சாதாரண மனுஷியாய்,
உன் வட்டத்தைத் தாண்டி
வெளியே வந்து விடு.


பி.கு : இந்த கவிதை(கண்டுக்காதீங்க விடுங்க) தவறாகவும் புரிந்து கொள்ளப் படலாம் என்ற பயத்தில் இதை எழுதுகிறேன். இது திருமணத்திற்கு பின்பு ஒட்டு மொத்தமாய் தடம் புரண்டு போன ஒரு சில பெண்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ, பெண்களை மட்டம் தட்டும் முயற்சியல்ல.

அப்படியே என்ன நினைக்கறீங்கன்னும் சொல்லிட்டுப் போங்க.

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . 30 மறுமொழிகள் »

30 பதில்கள் “பத்தினிப் பெண்கள்” க்கு;

  1. நாகு Says:

    அய்யா சாமி….100 சதம் பெண்கள் இப்படித்தான் என்று நான் ரொம்ப நாளாய் நெனைச்சிக்கிட்டு கெடந்தேன். ஆனா ஒரு வருஷத்துக்கு முன்னாடி வந்த டெக்கான் குரோனிக்கல் பேப்பர பாத்ததுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது சங்கதியே….சிலபாதி பொண்ணுங்க எல்லாம் தண்ணியடிக்குதாமே….(மிச்ச மீதியெல்லாம் சொல்லியத் தெரியனும்).

  2. லக்ஷ்மி Says:

    Nice poem nandha. i couldn’t type in tamil now. so will post a detailed comment later.

  3. Nandha Says:

    உங்களது விரிவான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்….

  4. Ganesh Says:

    Valllkayiilll Mudhalll murayyyaaa Oruu oooruuupidiyaaanaaa kaaariiyaamm paniiiyiirukaaa

    Kavidhai Suuuravalliii :)
    Nandha

  5. Anonymous Says:

    கவிதை அருமை. காதல் கவிதைதான் எழுத தெரியும்னு நெனைச்சுட்டு இருந்தேன். இது அதை விட டாப். கலக்குங்க.

  6. பிரேம்குமார் Says:

    நல்லதொரு கவிதை நந்தா. பெண் விடுதலை விரும்பிகள் பார்த்தால் மகிழ்ச்சி கொள்ளக்கூடும். வாழ்த்துக்கள்

  7. துர்கா Says:

    கவிதை நன்றாக உள்ளது.ஆனால் இதில் உள்ள கருத்துக்களில் எனக்கு உடன் பாடு இல்லை,ஒரு வேளை எங்கள் நாடும் உங்கள் நாடும் வேறுப்பட்டவையாக இருப்பதினால் இருக்கலாம்.

  8. அருட்பெருங்கோ Says:

    ம்ம்ம்…ஆணோடப் பார்வைல இப்படி சொல்லிட்டீங்க….
    ஆனா பெண்கள் பிரச்சினைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும்னு சொல்றாங்களே அதப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?

  9. Nandha Says:

    அதில எனக்கு உடன்பாடு இல்லீங்க.

    ஒரு விஷயத்தைப் பற்றி பேசாமலே அதை எப்படி புரிந்து கொள்ள முடியும். பெண்ணியம் பற்றி பேசும் ஒவ்வொரு ஆணும் அதை புரிந்து கொள்கிறான். அட்லீஸ்ட் அதைப் புரிந்து கொள்ள முயலுகிறான்.

    இதற்காகவாவது ஆண்கள் இதைப் பேச வேண்டும். இல்லாவிடில் பெண்ணியத்தைப் பற்றி, ஆண்களுக்கு ஒரு கண்ணோட்டமும், பெண்களுக்கு ஒரு கண்ணோட்டமும் தான் எஞ்சி நிற்கும். இது எந்நாளும் தீர்வைத் தராது.

    ஆண், பெண்ணிடையே பரஸ்பர புரிதலை, மதிப்பை ஏற்படுத்துவதுதான் காதலும்,நட்பும், பெண்ணியமும். பரஸ்பர புரிதல் இல்லாத எந்த ஒரு விஷயமும் கடைசி வரை விவாதப் பொருளாகவே இருக்கும்.

  10. narmadha Says:

    பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ஆனால் அதில் உங்களுடைய ராசி எல்லாம் போட்டுறிக்கிறீங்க? கொஞ்சம் முரன்பாடா இருக்கே? மத்தபடி கவிதை ரொம்ப அருமை.

  11. இராஜராஜன் Says:

    ரொம்ப நல்ல கவிதை நந்தா

    எனக்கும் இதே எதிர்பார்பு இருந்தது

    ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் இந்த வரயறையை தங்களின் சாதகமாக நிணைகின்றனர் தெளிவாய் வரயறுக்கப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ்வதாய்

    அங்கு இப்படியான எதிர்பார்பு எதிர்மறை விளைவைதான் தரும்

  12. கண்மணி Says:

    மிக நன்றாக இருக்கிறது கவிதையின் சொல்லாடல்.ஆனால் பொருள்தான் விளங்கவில்லை.நீங்கள் கூறும் ‘பத்தினிப்பெண்கள்’ பத்தாம்பசலிகளாக இருக்க வேண்டாம் என்று நினைப்பது தப்பில்லை.ஆனால் அதென்ன தவறு செய்யும் சாதாரணப் பெண்ணாக இரு என்கிறீர்கள்?

  13. வல்லிசிம்ஹன் Says:

    கவிதை அருமை நந்தா.(பழைய) பெண் போட வேண்டிய வேஷங்களில் இந்தக் கவிதையும் ஒன்று.

    பெண்களோ ஆண்களோ பேசாவிடில் இதுபோலக் கவிதையாக எழுதாவிடில் வாழ்க்கை மாறது. மாமனார் முன்பே கால்மேல் கால் போடும் பெண்களும் வந்தாச்சு இப்போது.:-)

  14. Nandha Says:

    அருட்பெருங்கோ நான் சொல்றது சரிதானே?

    //பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ஆனால் அதில் உங்களுடைய ராசி எல்லாம் போட்டுறிக்கிறீங்க? //

    அது அனேகமா Gmail ப்ரொஃபைல்ல இருந்து வருதுன்னு நினைக்கிறேன். ஏதோ ஃபில் பண்ணணுமேன்னு பண்ணியதுங்க. மற்ற படி சீரியஸா அதை எடுத்துக்கறதில்லை.

    //ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் இந்த வரயறையை தங்களின் சாதகமாக நிணைகின்றனர் தெளிவாய் வரயறுக்கப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ்வதாய்//

    சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் இராஜராஜன். நன்றி.

    //பெண்களோ ஆண்களோ பேசாவிடில் இதுபோலக் கவிதையாக எழுதாவிடில் வாழ்க்கை மாறது.//

    உண்மைதான். இதைத்தான் நானும் சொன்னேன்.

    //மாமனார் முன்பே கால்மேல் கால் போடும் பெண்களும் வந்தாச்சு இப்போது.:-)//

    நன்றி வல்லிசிம்ஹன். நல்ல மாற்றங்கள் தொடரட்டும் என்று எதிர் பார்ப்போம்.

    //மிக நன்றாக இருக்கிறது கவிதையின் சொல்லாடல்.ஆனால் பொருள்தான் விளங்கவில்லை.நீங்கள் கூறும் ‘பத்தினிப்பெண்கள்’ பத்தாம்பசலிகளாக இருக்க வேண்டாம் என்று நினைப்பது தப்பில்லை.ஆனால் அதென்ன தவறு செய்யும் சாதாரணப் பெண்ணாக இரு என்கிறீர்கள்?//

    வாருங்கள் கண்மணி. //சரி, தவறுகள் செய்யும்
    சாதாரண மனுஷியாய்//

    இவை இரண்டு வரிகள் மட்டும் புரிய வில்லையா? அல்லது முழுதுமேவா? தங்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.

    பல பெண்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம், தான் இவ்வாறுதான் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் சமூகம் மதிக்கும். இவற்றை மீறி தான் செய்யும் எதுவுமே தவறுதான் என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

    அதனாலேயே கணவரின் பெயர் சொல்லி அழைக்கலாம் என்றோ, பழைய நண்பர்களிடம் பேசலாம் என்றோ, வேறு ஏதேனும் ஆசைகள் வரும் போது, அதை வெளிப்படுத்துவது கூட தவறு என்று நினைத்து, தனக்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர். தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்ன சின்ன செயல்களும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்திற்குட்படாததாகவே இருக்க வேண்டும். தான் தவறுகளுக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    “Life is Trial and Error” இதற்கு யாரும் விதி விலக்கல்ல எனபதைத்தான் அப்படி சொன்னேன்.
    உங்களுக்கு எப்படி தெரியும்? நாங்கள் (பெண்கள்) அப்படி இல்லை என்று நீங்கள் திட்ட வட்டமாக கூறினால், அதை என்னால் மறுக்க முடியாது.

    இது என்னைச் சுற்றியுள்ள பெண்களிடமிருந்து நான் புரிந்து கொண்டது.

    மீண்டும் சொல்கிறேன். இது எல்லா தவறும் பெண்கள் மீதே என்று கூறி தப்பிக்கும் முயற்சி இல்லை. எங்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவர் இல்லை என்று ஒரு புரிதலை ஏற்படுத்தும் முயற்சி . அவ்வளவே.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கண்மணி. இது குறித்து தங்களுக்கு வேறு ஏதேனும் அபிப்ராயம் இருந்தால் சொல்லவும். அது என்னை மாற்றிக் கொள்ள உதவும்.

  15. வினையூக்கி Says:

    கவிதைக்கு :) :):)

  16. ரவிசங்கர் Says:

    bore அடிக்கும் பத்தினிப் பெண்கள் :) சரி தவறு என்ற வட்டத்தைத் தாண்டி சராசரி மனிதர்களாய் அனைவரும் வாழ்வது நலம். முகமூடிகள் நிறைந்த உலகம் எரிச்சல் அடைய வைக்கிறது.

    //அதனாலேயே கணவரின் பெயர் சொல்லி அழைக்கலாம் என்றோ, பழைய நண்பர்களிடம் பேசலாம் என்றோ, வேறு ஏதேனும் ஆசைகள் வரும் போது, அதை வெளிப்படுத்துவது கூட தவறு என்று நினைத்து, தனக்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர். தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்ன சின்ன செயல்களும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்திற்குட்படாததாகவே இருக்க வேண்டும். தான் தவறுகளுக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.//

    மிகச் சரியான கருத்துக்கள் !

  17. J K Says:

    அழகச் சொல்லியிருக்கீங்க நந்தா. சிலர் தன் மனைவி அந்த பழமையிலிருந்து புதுமைக்கு வரவேண்டும் என ஆசைபடுகின்றனர், சிலரே அதை தவறாக பயன்படுத்திகொண்டுள்ளனர்.

  18. Nandha Says:

    //ithu ungada kavithaya..yarl.com la intha kavithaya yaro inithirunthargal.

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=20149 //

    அதாங்க எனக்கே தெரியலை. என் கவிதையை வெச்சு அங்க சண்டை நடந்திட்டிருக்கு.

  19. ஜி Says:

    arumaiyaana kavithai…
    asathirukeenga…

  20. Anonymous Says:

    //narmadha said…
    பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ஆனால் அதில் உங்களுடைய ராசி எல்லாம் போட்டுறிக்கிறீங்க? கொஞ்சம் முரன்பாடா இருக்கே? மத்தபடி கவிதை ரொம்ப அருமை
    //

    :) ))

    தல.. அது ப்ளாகர் வேலை.

    பதிவர் ஒருவர் தன்னுடைய, பிறந்த தேதி, வருடம் போன்றவற்ரை கொடுக்கும் போது அதுவாகவே இப்படி போட்டு ஜாதகம் காட்டுகிறது.

    :) )

  21. தமிழ்நதி Says:

    எனக்கு நீங்களிட்ட பின்னூட்டத்தின் வழி இங்கு வந்தேன். கவிதைகள் எளிமையாக நன்றாக இருக்கின்றன. குறிப்பாக இந்தக் கவிதை பிடித்தது. பெண் என்ற பெருங்கவிதை(கழுதையல்ல)உங்களுக்குப் பல கவிதைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் நல்ல நேசமுடைய மனிதராக இருக்கவேண்டும் என்று உங்கள் கவிதைகளை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன்.

  22. Nandha Says:

    //பெண் என்ற பெருங்கவிதை(கழுதையல்ல)உங்களுக்குப் பல கவிதைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் நல்ல நேசமுடைய மனிதராக இருக்கவேண்டும் என்று உங்கள் கவிதைகளை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன். //

    நன்றி தமிழ் நதி…..

  23. யோசிப்பவர் Says:

    ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வித்தியாசமான கவிதை படித்திருக்கிறேன்!! நன்றி

  24. Chandravathanaa Says:

    மிகவும் அருமை நந்தா.
    சாதாரண மனித உணர்வுகளைக் கூட பெண் என்பதற்காக எங்கோ புதைத்து விடுகின்ற
    சில பெண்களும், அதையே பெண்களிடம் இருந்து எதிர்பார்க்கின்ற சில ஆண்களும் என்று
    இன்னும் இருந்தாலும் உங்களைப் போன்ற கருத்துக் கொண்டவர்களும் இருப்பது வரவேற்கத்தக்கதே.

    நீங்கள் குறிப்பிட்டது போல

    தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்ன சின்ன செயல்களும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்திற்குட்படாததாகவே இருக்க வேண்டும். தான் தவறுகளுக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள்:

    அதற்குக் காரணம் அப்படியான பெண்கள்தான் நல்லபெண்கள், அடக்கமான பெண்கள்,… என்று பலவிதமான புகழாரங்கள் சூட்டப் படுகிறார்கள். மற்றைய பெண்கள் சில பெண்களாலேயே ஏன் சமயத்தில் கணவனால் கூட விசனமாகப் பார்க்ப் பட்டு விமர்சிக்கப் படுகிறார்கள்.

    ஆனாலும் இன்றைய நிலையில் இந்த நிலைப்பாட்டில் சில பெண்களிடம் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.

    குறிப்பாக ஆண்கள் இது பற்றிய சிந்தனைகளைத் தம்மைச் சுற்றியுள்ள பெண்களோடு கதைக்கும் அதே வேளையில் பெண்களும் தாம் நல்லவர்கள் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக வாழாது, நல்லவர்களாக இருந்து கொண்டு தமக்காக வாழப் பழக வேண்டும். தமது உணர்வுகளை முதலில் தாமே மதிக்கப் பழக வேண்டும்.

    உங்கள் புதிரா புதினமா கவிதையும் அருமையானது. கருத்தை ரசித்தேன்.
    கணவனிடம் கூட தமது உணர்வுகளைக் காட்டுவது பாவம் என நினைக்கும் பெண்களும்
    உடலுறவு என்பதே தமக்குப் பிடிக்காத ஒன்று என்பது போலப் பாவனை பண்ணும் பெண்களும்
    இவைகளைப் படித்தால் நல்லது.

  25. Nandha Says:

    //ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வித்தியாசமான கவிதை படித்திருக்கிறேன்!! நன்றி //

    நன்றி யோசிப்பவரே… தாமதமாக போஸ்ட் செய்தததற்கு மன்னிக்கவும்.

    தங்களுடைய விரிவான விமர்சனத்திற்கு நன்றி சந்திரவதனா.

    //அதற்குக் காரணம் அப்படியான பெண்கள்தான் நல்லபெண்கள், அடக்கமான பெண்கள்,… என்று பலவிதமான புகழாரங்கள் சூட்டப் படுகிறார்கள். மற்றைய பெண்கள் சில பெண்களாலேயே ஏன் சமயத்தில் கணவனால் கூட விசனமாகப் பார்க்ப் பட்டு விமர்சிக்கப் படுகிறார்கள்.//

    மிகச் சரி. இதுதான் கொடுமையிலும் கொடுமை.

    //குறிப்பாக ஆண்கள் இது பற்றிய சிந்தனைகளைத் தம்மைச் சுற்றியுள்ள பெண்களோடு கதைக்கும் அதே வேளையில் பெண்களும் தாம் நல்லவர்கள் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக வாழாது, நல்லவர்களாக இருந்து கொண்டு தமக்காக வாழப் பழக வேண்டும். //

    அதற்கான முயற்சியே இது. என்னாலான ஒரு பகிர்தலே இது.

    //உங்கள் புதிரா புதினமா கவிதையும் அருமையானது. கருத்தை ரசித்தேன்.
    கணவனிடம் கூட தமது உணர்வுகளைக் காட்டுவது பாவம் என நினைக்கும் பெண்களும்
    உடலுறவு என்பதே தமக்குப் பிடிக்காத ஒன்று என்பது போலப் பாவனை பண்ணும் பெண்களும்
    இவைகளைப் படித்தால் நல்லது. //

    மீண்டுமொரு முறை நன்றி.

  26. ஆழியூரான். Says:

    நிஜமாகவே கவிதை நியாயமானதாக, உண்மையானதாக இருக்கிறது.

    கொழுந்தனார் என்பவன் பதினைந்து வயது பொடிப்பையனாக இருப்பான். ஆனாலும் என்ன..? அவன் கணவனின் தம்பியாயிற்றே.. அதனால், அவனை அவன், இவன் என ஒருமையில் அழைக்க முடியாது.. ‘அவர்’ வரும்போது நீட்டிய கால்களை மடக்கிக்கொள்ள வேண்டும். இப்படியான சங்கடமான யதார்த்தம்தான் என் சுற்றத்திலும் நிகழ்கிறது.

    உண்மையை மறைக்காமல் சொன்னால், உங்கள் கவிதைகளை படிக்கும்போது ‘அய்யயோ…இப்படிப்பட்ட ஒரு பெண் நமக்கு வந்துவிட்டால்..?’ என்ற எண்ணம்தான் மனதின் அடியாழத்தில் ஓடியது.

  27. காயத்ரி Says:

    நீங்கள் இட்ட பின்னூட்டத்தின் வழி வெகு தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறேன்.. மன்னியுங்கள் நந்தா! கவிதை நன்றாயிருந்தது. இப்படிப்பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன? இரூக்கிறார்கள் என்றாலும் எல்லாமே திணிக்கப்பட்டவை நந்தா.. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

  28. SENTHIL Says:

    NAAN PADICHU PARTHEN ROMBA ARUMAIYANA ORU VISAYATHAI SOLLI IRUKKINGA ROMBA NANDRI SENTHIL


மறுமொழி இடுக